மீண்டும் தமிழர்களை நாடு கடத்த தயாராகும் ஜேர்மனி
ஜேர்மனியில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழ அகதிகள் 9 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக ஜேர்மன் ஈழத் தமிழர் மக்கள் அவையின் பிரதிநிதி வி. அகிலன் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் தென்மாநிலத்தில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழ அகதிகள் 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் நாடு கடத்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வலையொளி ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்த விடயத்தை பகிரங்கப்படுத்தினார்.
இதேவேளை, மனிதவுரிமைகள் மீறல்களிலும் இனவழிப்பு நடவடிக்கைகளிலும் இருந்து தம்மைப் பாதுகாக்கவென்று புலம்பெயர்ந்து வந்து அகதி அந்தஸ்துக்கான கோரிக்கை வைத்திருக்கும் ஈழத் தமிழர்களை நாடுகடத்தும் செயற்பாடுகளை ஜேர்மனி உடனடியாக நிறுத்தி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என ஜேர்மனியில் இருந்து இயங்கும் ஈழத்தமிழ் மக்களவை மற்றும் ஜேர்மனி தமிழ் இளையோர் அமைப்பு என்பன வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பில் இரு அமைப்புக்களும் இணைந்து கூட்டாக ஜேர்மனிய அமைப்புக்கு விடுத்துள்ள கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தனிநபர் உரிமைகளையும் மனிதவுரிமைகளையும் மதிக்கும் என்று அதீத நம்பிக்கையைக் கொண்ட நாடாக ஈழத் தமிழ் மக்கள் நேசிக்கும் நாடுகளில் ஒன்றான ஜேர்மனிய நாடும் அதன் அரசும் தன் இரு முகங்களை தனது இரு அமைச்சகங்களுக்கூடாக வெளிக் கொண்டு வந்து கொண்டிருப்பது எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ப்தியையும் தருகின்றது.
விலாங்கு மீனைப் போல பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டி இரட்டை வேடமிட்டுக் கொள்கிறதா? ஜேர்மனி என்று எமக்கு சந்தேகத்தை எழுப்புகிறது இச்செயற்பாடுகள்.
ஜேர்மனிய அமைச்சுக்களில் ஒன்றாக இருக்கும் சர்வதேச வெளிவிவகாரங்களுக்கான அமைச்சு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் நாள் ஜெனீவாவில் நடைபெற்ற மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் மாநாட்டில் ஐக்கியநாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையகத்தால் கொண்டுவரப்பட்டிருந்த, ஸ்ரீலங்காவில் நடந்த உள்நாட்டுப் போரில் மனிதவுரிமைகள் மீறப்பட்டது என்ற தீர்மானத்துக்கு ஆதரவளித்தது ஜேர்மனிய அரசின் வெளிவிவகார அமைச்சு. அதனூடாக ஸ்ரீலங்காவில் மனிதவுரிமைகள் அன்று ஆட்சியில் இருந்த மகிந்தராஜபக்ச அரசால் மீறப்பட்டது என்று கூறியது. அத் தீர்மானத்தில் இருந்த சரத்துக்களை முழுமையாக ஏற்று அத் தீர்மானத்துக்குத் தனது ஆதரவை வழங்கியது.
அதேநேரம், தமிழீழ விடுதலைப் போர் மௌனிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் நடத்திய இனவழிப்பு முடிவுறாது தொடரும் இன்றைய சூழலில், இன்றும் ஆட்சியில் இருந்து கொண்டு ஸ்ரீலங்காவில் இராணுவ ஆட்சி அதிகாரத்தை நடைமுறையில் வைத்துக் கொண்டு இனவழிப்பின் தொடர்ச்சியையும் மனிதவுரிமைகளையும் மீறிக் கொண்டு இருக்கும் மகிந்த மற்றும் கோட்டபாய சகோதரர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றார்கள்.
அவர்களால் இன்றும் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவரும் இனவழிப்பு நடவடிக்கையில் இருந்து உயிர் தப்பி வாழ்வதற்காக தாய்நாடு விட்டு தப்பி வந்து அகதி அந்தஸ்து கோரிக்கை விடுத்திருந்த ஈழத்தமிழ் மக்கள் பலரின் கோரிக்கையை நிராகரித்தது மட்டுமல்லாது நாடுகடத்தும் செயற்பாட்டை முன்னெடுத்துவருகிறது ஜேர்மனிய அரசின் உள்துறை அமைச்சு.
இவ்விரண்டு செயற்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணாகி ஜேர்மன் அரசின் இவ்விரட்டை முகம் எமக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் தருகின்றது.
கடந்த மார்ச் 30 ஆம் நாள் (30.03.2021 ) ஒரு தொகுதி ஈழத் தமிழ் உறவுகளை கைது செய்து Düsseldorf விமான நிலையம் ஊடாக பல எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் நாடுகடத்தி இருந்தது.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு நாடுகடத்தல் முயற்சிக்கு தயாராகி வருகிறது ஜேர்மனியின் உள்துறை அமைச்சகம்.
அதன் அடிப்படையில் குறிப்பாக Nordrhein-Westfalen மற்றும் Baden-württemberg மாநிலத்தில் எமது உறவுகள் பலரைக் கைது செய்தும், பல உறவுகளை கைது செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது - என்றுள்ளது.