ஆப்கானில் அரங்கேறும் கொடூரம் -உணவு வாங்க மணப்பெண்களாக விற்கப்படும் சிறுமிகள்
ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க முடியாமல் சிறுமிகளை குழந்தை மணமகளாக விற்பனை செய்வது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் வயது வந்த மணமகளாக வழங்கப்படுவது வழமை என வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சிறுமிகளை விற்று பெறப்பட்ட பணத்தில் குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு உணவு வாங்கவும், கடனை அடைக்கவும் பயன்படுத்தியதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முடிவுக்கு வருத்தம் தெரிவித்தாலும் இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டியதாயிற்று என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அதே நேரத்தில், எதிர்காலத்தில் மணப்பெண்களாக இருப்போம் என்ற வாக்குறுதியின் பேரில் இளம் பெண்களை காட்டி கடன்களை பெறும் சூழ்நிலைகள் ஆப்கானிஸ்தானில் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால், 40 மில்லியன் ஆப்கானிஸ்தானியர்களின் ஒட்டுமொத்த மக்களும் கடும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.