ஞானசார தேரர் அரசாங்கத்தின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளரா?
இவர் அண்மையில் இலங்கையின் முக்கிய விமான நிலையங்களில் பயங்கரவாத தாக்குதல் நடை பெறலாம் என்று அரசாங்கத்தை எச்சரிக்கை செய்த போது கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் தேரர் அந்தர் பெல்ட்டி அடித்து தான் அவ்வாறு சொல்லவில்லை என்றார்.
முஸ்லிம்களுக்கு எதிராக இவருடைய வெறுப்புப் பேச்சே அளுத்கம கலவரத்திற்கு காரணமாகியது.ஆனால் அது தொடர்பில் இவருக்கெதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பல அப்பாவி முஸ்லிம்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வருடக்கணக்கில் விளக்க மறியல் என்ற போர்வையில் சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென பரிந்துரைக்கப்பட்டதுடன் பொதுபலசேன அமைப்பும் தடை செய்யப்பட வேண்டுமென அவ்வாணைக்குழு பரிந்துரைத்திருந்தது.
தேரருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் அரசாங்கம் மேற் கொள்ளவில்லை. மாறாக எழுந்தமானமாக முஸ்லிம் அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இவ் அமைப்புகள் ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய தஃவா பணியில் ஈடுபட்டவை.
நேற்று கருப்பு சீருடை அணிந்த பொலிஸ் பாதுகாப்புடன் தேரர் மன்னாருக்கு பயணம் செய்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பார்க்க கிடைத்தது.
முஸ்லிம் சமுதாயத்தை குறிவைத்து தாக்கிய தேரர் பின்னர் அல்குர்ஆனை தரக்குறைவாக தாக்கினார்.தற்போது அல்லாஹ்வை தாக்கத் தொடங்கியுள்ளார்.
ஆனால் தற்போது ஐக்கிய நாடுகள் அமர்விற்கு சென்றுள்ள ஜனாதிபதி இலங்கை மக்கள் அனைவரின் உரிமையும் பாதுகாக்கப்படும் என்கின்றார்.
வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் சர்வதேச இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலைமை முன்னேற்றம் தொடர்பில் தெளிவுபடுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த கிழமை பெற்றோலிய வளத்துறை அமைச்சரும் பிலித்துரு ஹெல உறுமையின் தலைவருமான அமைச்சர் உதய கம்மன்பில ஐக்கிய அறபு எமிரேட்ஸ் அமைச்சருடன் எரிபொருளை கடனிற்கு தருமாறு மிக வினயமாக வேண்டியபோது அமீரகம் அதனை வழங்க சம்மதித்துள்ளது.
இதே உதய கம்மன்பிலயின் கட்சியில் முக்கிய பதவியில் உள்ள மதுமாத அரவிந்த் அக்கட்சியை சேர்ந்த ஜகத் என்பவருமே மினுவாங்கொடையில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் முக்கிய பங்காற்றியவர்கள்.
மேதகு ஜனாதிபதி சகல மக்களின் உரிமையும் பாதுகாக்கப்படும் என உத்தரவாதம் வழங்கும் போது, வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் சர்வதேச இஸ்லாமிய நாடுகளின் செயலாளருடன் முஸ்லிம்களின் நலன் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் போது, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் கம்மன்பில அமீரகத்துடன் எண்ணெய் பிச்சை கேட்கும்போது அரசாங்கத்தின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளரான ஞானசார தேரர் அல்லாஹ்தான் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி என குற்றம் சுமத்தி முஸ்லிம்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையை பார்க்கிறார்.
ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் தேரரின் பேச்சைக் கேட்டு விமான நிலையங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் அரசாங்கம் தனக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள செல்வாக்கு வீழ்ச்சியை சமாளிக்க இலங்கை முஸ்லிம் சமூகத்தை மீண்டும் பலிகொடுக்க நினைக்கும் செயல் திட்டத்தினை அமுல்படுத்த ஞானசாரவை பயன்படுத்துகிறதா?
நாம் வாக்கு போட்டு பாராளுமன்றத்தை வலம் வரும் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த அநியாயங்களுக்கு எதிராக எப்போது வாய் திறப்பார்கள்?
இந்த தேரருக்கு அல்லாஹ் ஹிதாயத்(நேர்வழி) வழங்கப் பிரார்த்திப்போம். அன்றேல் அவனே இவனைப் பார்த்துக் கொள்வான். ஒன்று நேர்வழி அல்லது நாசம் இரண்டிற்கும் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்துவோம்.
யூஎல்எம்என் முபீன்