பாதுகாப்பு அமைச்சில் அமெரிக்க உளவுப்பிரிவைச் சேர்ந்தவர் - ஞானசார தேரர் எச்சரிக்கை
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன என்பவர் அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவுப்பிரிவைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் ஒரு சிங்கப்பூர் பிரஜையும் ஆவார் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் உட்பட பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுக்குக் கூட இஸ்லாமிய அடிப்படைவாத விடயங்கள் பற்றி துளியளவேனும் அறிவற்றவர்கள் எனத் தெரிவித்துள்ள அவர்,
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நிறுத்துவதாக சூளுரைத்து இலங்கையில் ஆட்சிக்குவந்த கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தின் காலத்திலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என விசனம் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை வேரோடு அழிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் பாதுகாப்பு அமைச்சை முற்றுகையிடப் போவதாக அவர் இதன்போது எச்சரித்துள்ளார்.