பருத்தித்துறையில் தங்கச் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய சந்தேகநபர்கள்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பெண்ணொருவரிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற இருவரை நெல்லியடி காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில் வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை கண்ட பொதுமக்கள் இருவரையும் துரத்தி மடக்கிப் பிடிக்க முயன்றபோதிலும், அவர்கள் பயன்படுத்திய நவீன ரக மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.
நெல்லியடி காவல்துறை
எனினும், சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை பொதுமக்கள் பதிவு செய்து பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பருத்தித்துறை காவல்துறையினர், அருகிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் வழங்கினர்.
அதன்படி, நெல்லியடி பகுதி ஊடாக குறித்த மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பிச் செல்வதை அவதானித்த நெல்லியடி காவல்துறையினர், அவர்களை மறித்து கைது செய்துள்ளனர்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பெண்ணிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியும் சந்தேகநபர்களின் உடமையில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்படி கைது செய்யப்பட்ட இருவரும், மீட்கப்பட்ட தங்கச் சங்கிலியும், வழிப்பறிக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |