யாழ். தென்னை விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி
யாழில் (Jaffna) எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் வெள்ளை ஈயில் இருந்து தென்னைகளை பாதுகாக்கும் 2 வார வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (09.07.2025 ) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
உரையாற்றிய அரசாங்க அதிபர், தென்னைப் பயிர்ச் செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அமைய, தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தினைக் கட்டுப்படுத்த 200 விசேட தெளிகருவிகளைப் பயன்படுத்தி தென்னை மரங்களை தண்ணீர் மூலம் சுத்தப்படுத்தும் திட்டமானது எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் இரு வாரங்களுக்கு நடைபெற உள்ளது.
வெள்ளை ஈ தாக்கம்
வெள்ளை ஈ தாக்கம் அதிகமாக இனங்காணப்பட்ட சாவகச்சேரி, கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்து, சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் சிறப்பான ஒருங்கிணைப்பை தென்னைப் பயிர்ச்செய்கை சபைக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், ஏனைய பத்து பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்ட செயற்றிட்டத்தின் பின்னர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை சாவகச்சேரியிலும், 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் கோப்பாயிலும், 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் உடுவிலும், 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நல்லூரிலும் மற்றும் 25 ஆம் திகதி யாழ்ப்பாண பிரதேசத்திலும் 200 தெளிகருவிகள் மூலம் தென்னை மரங்களை கழுவும் செயற்பாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
