கோட்டாபய அரசாங்கம் தொடர்பில் அலி சப்ரி வெளியிட்ட தகவல்
பொருளாதாரம் என்பது நாட்டின் இதயம்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் கீழ் இருந்த அமைச்சரவை நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்து அறிந்திருக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது நாட்டின் இதயம் என்பதை அரசாங்கம் தற்போது கற்றுக் கொண்டுள்ளதாகவும் அது தோல்வியடையும் பட்சத்தில் நாட்டின் ஏனைய அனைத்து விடயங்களும் தோல்வியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அலி சப்ரி, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான அரசாங்கத்தின் பொறுப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார்.
கடந்த அமைச்சரவை

கடந்த அமைச்சரவை அமைச்சர்கள் தங்கள் தனிப்பட்ட துறைகளின் அபிவிருத்தியில் அதிக அளவில் கவனம் செலுத்தியிருந்ததாகவும் நீதியமைச்சர் என்ற வகையில் தானும் தனது துறையின் வளர்ச்சி குறித்து மாத்திரம் சிந்தித்து செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சரவைக்கு நாட்டின் பொருளாதாரம் குறித்த அறிவு குறைந்தபட்சமே இருக்குமெனில் நாட்டு மக்களின் நிலை மேலும் மோசமடையும் எனவும் வரி விதிப்பு இல்லாமல் நாட்டிற்கு எதிர்காலம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.