ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டிஆராச்சி!
சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டிஆராச்சி ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை சுதேவ ஹெட்டிஆரச்சி பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் வாரத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான சுதேவ ஹெட்டிஆரச்சி, அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
25 வருடகால ஊடக வாழ்வில் பிரபலமான அறிவிப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் முக்கிய ஊடக நிறுவனங்களில் உதவி முகாமையாளராகவும், முகாமையாளராகவும், உதவி பொது முகாமையாளராகவும் பொது முகாமையாளராகவும் பணிப்பாளராகவும் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பதவிவகித்த திறமையான நிர்வாக அதிகாரியாவார்.
சுதேவ ஹெட்டிஆரச்சி ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமனம் பெறுவதற்கு முன்னர் சுவர்னவாஹினி ஊடக வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.