வடக்கு - தெற்கை இணைக்க கோட்டாபய எதிர்பார்ப்பு
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பிரதேசங்களை நெடுஞ்சாலை ஊடாக இணைப்பதற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் பெர்ணான்டோவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமாவுக்கும் (kenichi yokoyama) இடையிலான சந்திப்பு அண்மையில் நெடுஞ்சாலை அமைச்சில் நடைபெற்றது.
இதன்போதே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பை ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்திப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமாவிடம் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதன்போது வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பிரதேச வீதிகளை நெடுஞ்சாலை ஊடாக இணைப்பதன் மூலமாக நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு கிராமிய வீதி அபிவிருத்தி செயற்பாடுகள் வாயிலாக கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு உந்துசக்தி அளிக்க இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.