அமைச்சர் விமல் மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக கோட்டாபய கடுமையான முடிவை எடுப்பாரா?
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அணியினருக்கு எதிராக கடும் முடிவை எடுக்க வேண்டும் என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட அணியினர், அரசாங்கத்திற்குள் இருந்தகொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது தொடர்பாக கடும் நடவடிக்கைகளை எடுக்க ஆளும் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
சிறிலங்காவில் தற்போது, பாரதூரமான பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலைமையில், இந்த அணியனர், அந்த நெருக்கடியை மேலும் உக்கிரமடைய செய்து மேற்கொள்ளும் இப்படியான செயல்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதனால், வீரவங்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட அணியினருக்கு எதிராக அரச தலைவர் கடும் முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்திற்கு இருந்துகொண்டு அதிகளவில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார். அவர் எந்த சந்தர்ப்பத்திலும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைத்ததில்லை.
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கூட அவர் தனது கருத்துக்களை வெளியிட்டதில்லை. இதன் காரணமாக இனி வரும் காலங்களில் அமைச்சர்கள் உதய கம்மன்பில மற்றும் வீரவங்ச ஆகியோர் கலந்துகொள்ளும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள போவதில்லை.
தொடர்ந்தும் அரசாங்கத்தை இவ்வாறு நடத்திச் செல்ல முடியாது. எப்படியான கஷ்டமான முடிவாக இருந்தாலும் அரச தலைவர், இவர்கள் சம்பந்தமாக கடும் முடிவை எடுக்க வேண்டும் என்றார்.