கோட்டாபயவால் வேகமாக அதிகரித்த இலங்கையின் கடன்தொகை! வெளியான தகவல்
இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடம் இருந்து பெற்ற கடன்தொகையானது மொத்த தேசிய உற்பத்தியில் 104.6 வீதமாக அதிகரித்துள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் குறித்த தகவலை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளது.
இலங்கை நிதி முகாமைத்துவம் மற்றும் அரச கடன் தொடர்பான விசேட கணக்காய்வு விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு இடையிலான நான்கு ஆண்டுகள் சம்பந்தமாக தேசிய கணக்காய்வு அலுவலகம் இந்த விசாரணையை நடத்தியிருந்தது.
அதிகளவான கடன்
மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 86.8 வீதமாக காணப்பட்ட அரச கடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 104.6 வீதமாக அதிகரித்துள்ளதாக கணக்காய்வு விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கை அரசு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களில் அதிகளவான கடனை பெற்றுக்கொண்டுள்ளதன் காரணமாக கடன் வீதம் இவ்வாறு அதிகரித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறிலங்காவின் அதிபராக கோட்டாபய ராஜபக்ச இருந்த போது 17.8 வீதமான கடன்தொகை இலங்கை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.