“அதிசயமான கதைகளைக் கூறும் கோட்டாபய”
மக்களை ஏமாற்ற தற்போது பல்வேறு நாடகங்களை அரங்கேற்ற முயற்சித்து வருகின்ற நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அதிசயமான கதை ஒன்றை கூறியுள்ளார் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜா-எல தொகுதியின் அமைப்பாளருமான விஜித் விஜயமுனி சொய்சா (Wijith Wijayamuni Zoysa) தெரிவித்துள்ளார்.
தனித்து சிந்தித்து எதனையும் செய்ய முடியாத - அமைச்சர்களை கூட பதவி நீக்க முடியாத ஒரு அரச தலைவரினால் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும் என மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய அரசாங்கத்திற்கு 69 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும். இது போதவில்லை என தனது சகோதரனை பிரதமராக்க வேண்டும் என்றனர் மக்கள் அதனை செய்துக்கொடுத்தனர்.
இதனையடுத்து நாடாளுன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கேட்டனர். மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் வழங்கினர். மூன்று இரண்டு பெரும்பான்மை பலத்துடன் கூடிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 20ஆவது திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்றிக்கொண்டனர்.
நாடாளுமன்றத்தில் இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கி, அரச தலைவரின் அதிகாரங்களை அதிகரித்தவர்கள் தற்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர்.
இவர்கள் மக்களை ஏமாற்ற தற்போது பல்வேறு நாடகங்களை அரங்கேற்ற முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில், அரச தலைவர் அதிசயமான கதை ஒன்றை கூறியுள்ளார்.
அமைச்சரவை, அமைச்சுக்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்கு தான் நியமித்தவர்கள் தனது கொள்கையை நடைமுறைப்படுத்துவதில்லை என அரச தலைவர் கூறுகிறார். இதனால், அரச தலைவரினால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றே மக்களும் கூற வேண்டியுள்ளது.
சேரும் பெயில், சேரின் சகாக்களும் பெயில். அத்துடன் விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோரை அரச தலைவரினால் பதவியில் இருந்து நீக்க முடியவில்லை. அவர்களை பதவி விலகுமாறு அவர் கூறுகிறார். அவர்கள் பதவி விலக மாட்டோம் என்கிறனர்.
அமைச்சர்களையும், கூட்டுத்தாபனம் மற்றும் சபைகளின் தலைவர்களையும் நியமிக்கவும் நீக்கவும் முடியாத முதுகெலும்பில்லாதஅரச தலைவர் ஒருவரால் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும். இதுவே மக்கள் மத்தியில் இருக்கும் கேள்வி.
அரச தலைவர் கூறுவதை கேட்டு செய்ய முடியாது, அவரால் தனித்து சிந்தித்தும் எதனையும் செய்ய முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You May Like This