கோட்டாபயவுக்கு அதிகாரம் உள்ளது - சுசில் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் பதில்
அரச தலைவர் கோட்டாபய நினைத்தால் என்னையும் பதவி நீக்கம் செய்யலாம். அதற்கான அதிகாரம் அவரிடம் உள்ளது என ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விமர்சித்தமையினாலேயே இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விமர்சனம் செய்வதற்கு ஆளுங்கட்சியில் உள்ளவர்களுக்கு தடையா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் இந்த ஊடக சந்திப்புக்கு வரும் வழியில் தான் அது தொடர்பில் அறிந்தேன். அரசமைப்பின் பிரகாரம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே அரச தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல. மேலும் இந்த முடிவு குறித்து கட்சிக்குள் முன்னர் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானமோ அல்ல.
சுசில் பிரேமஜயந்த எனது நெருங்கிய நண்பர். நானும் கவலை அடைகின்றேன்.
அசர தலைவர் நினைத்தால் என்னையும் நீக்கலாம்.
அரசை விமர்சித்ததால் தான் அவர் நீக்கப்பட்டார் எனக் கூறப்படுவதை ஏற்க முடியாது. தற்போதைய அமைச்சரவையில் சுதந்திரம் இருக்கின்றது. கம்மன்பில போன்றவர்கள் நீதிமன்றத்தைக்கூட நாடியுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.