என் மீது அபத்தமான குற்றச்சாட்டுகள்! ஜனாதிபதி கோட்டாபய ஆவேசம்
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பசில் ராஜபக்ஷவும் தானும் உள்ளதாக எதிர்க்கட்சியினர் அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘கிராமத்துடன் உரையாடலின்’ 14ஆவது நிகழ்ச்சி இன்று காலி மாவட்டத்தில் உள்ள ஹிக்கடுவ பிரதேச செயலக பிரிவில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் பசில் ராஜபக்ஷவும் நானும் நிசங்க சேனாதிபதியும் இருப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினரை அழைத்து அறிந்த விடயங்களை பெற்றுக்கொள்ளுமாறு நான் தெரிவித்தேன்.
எனினும் தகவல்களை கேட்கச் சென்றபோது, எனக்குத் தெரியாது. நான் மறந்துவிட்டேன். இதுபோன்ற தகவல்கள் எனக்கு தெரியாது என்று அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சியினர் எப்போதுமே இத்தகைய அபத்தமான குற்றச்சாட்டுகளையே கொண்டு வருகின்றனர்.
இது போன்ற குற்றச்சாட்டுக்களை அடியோடு நிராகரிக்கிறேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அண்மையில் குருணாகல் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, ஈஸ்டர் தாக்குதலுடன் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு தொடர்புள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.