அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் நடந்த விவாதம்!
அரச சேவையில் இருந்து தற்காலிக வேலை விடுப்பு நிமித்தம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் சம்பளம் வழங்கப்படுமென துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்த போதிலும், இன்றுவரை குறித்த சம்பளம் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனவே அரசாங்கம் நேரடியாக முடிவெடுத்து இந்த வேட்பாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க முடியாத காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இன்று(28) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் தற்போது தேர்தலை நடத்துவதா அல்லது இல்லையா என்று யோசித்துக் கொண்டு இருப்பதால், இந்த வேட்பாளர்கள் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை முறையாகப் பெறுவதில்லை என்பது பாரதூரமான விடயமாகும்.
அரச ஊழியர்களின் சம்பளம்
அவர்களின் தவறினால் இந்த சம்பளம் இழக்கப்படவில்லை. அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ள பயந்து முதுகெலும்பு இல்லாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இது அரசியல் ரீதியிலான பிரச்சினை, தேர்தலுக்கு பணம் ஒதுக்குவதை அரசாங்கம் தவிர்த்துள்ளதால் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்தாவிட்டால் அரச ஊழியர்களை மேலும் நிர்க்கதிக்குள்ளாக்காமல் இந்த வேட்பாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உரியவாறு வழங்குமாறும் அவர் பொறுப்பான அமைச்சரிடமும் சபாநாயகரிடமும் கோரிக்கை விடுத்தார்.
