அரச உத்தியோகத்திற்காக காத்திருப்போருக்கு பேரிடி - இடைநிறுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு!
அடுத்த ஆண்டில் அரச உத்தியோகங்களுக்கான ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன அறிவித்துள்ளார்.
புதிய ஆட்சேர்ப்புகள் கிடையாது என்பதனால் இதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தின் தயாரிப்பு பணிகள் தொடர்பிலான வழிகாட்டல்களை வெளியிடும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி அரச ஊழியர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்த ஆண்டுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
வாகன இறக்குமதி

அதேவேளை, வாகன இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீடிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டில் அரசாங்க நிறுவனங்களுக்கு தளவாடங்கள், காரியாலய உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதனை முடிந்த அளவு வரையறுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டில் ஊழியர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது சுற்றுநிரூபங்களுக்கு அமைய அத்தியாவசியமானது என்றால் மட்டும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.