அரசாங்கத்தின் போலி பிரசாரம்: பலாலியில் அமைக்கப்படும் இராணுவத்தின் மருத்துவ முகாம்
தற்போதைய அரசாங்கம் காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு அதனை சரிவர செய்யாத ஒரு போலி பிரசாரத்தை சர்வதேசத்திடம் வெளிப்படுத்தி வருவதாக வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
குறிபாக காணிகளை விடுவிப்பதாக கூறிக்கொண்டு 764 இலக்க பேருந்து வழித்தடத்தினை முற்றாகத் திறந்து விட்டு காணிகளை விடுவித்ததாக சர்வதேசத்திற்கு காட்டிக் கொள்கின்றது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பலாலி வீதி
“மக்களும் குறித்த பலாலி வீதியால்(764 இலக்க பேருந்து வழி) சென்று வருவதால் அவர்களுக்கும் ஏனைய காணிகள் தொடர்பில் அக்கறை இருக்கவில்லை.
மக்களுடைய காணிகள் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வளையப்பகுதியில் இருப்பதால் காணி உரிமையாளர்கள் அயல் வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் தொடர்ந்தும் 35 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.
மக்கள் தொடர்ந்து காணிகளுக்காக போராடி வருகின்றனர். எனவே இந்த அரசாங்கம் மக்களுடைய காணிகளை விடுவித்து தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
பலாலியில் இராணுவத்தின் மருத்துவ முகாம் அமைந்துள்ள காணியில்கைவிடப்பட்டிருந்த கட்டுமான வேலைகள் தற்பொழுது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காணிகள் விடுவிக்கப்பட மாட்டாதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் தற்பொழுது எழ ஆரம்பித்துள்ளது” என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
