பாடசாலை செல்லும் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை -அரச உத்தியோகத்தர் கைது
பாடசாலை செல்லும் சிறுமி கர்ப்பமான நிலையில் இன்று சிசுவை பிரசவித்து பாழடைந்த காணியில் வீசிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரின் கர்ப்பத்திற்கு காரணமான அரச உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
டெங்கு ஒழிப்பு பணிகள்
அண்மைக்காலமாக நாடளாவிய ரீதியில் டெங்கு வேகமாக பரவி வருவதாக சுகாதார தரப்பு எச்சரித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு ஒழிப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஏறாவூர் பகுதியிலும் டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்தப்பகுதியில் சுகாதாரதுறையில் டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் ஆணொருவர்,வீடுகளை சோதனை செய்யயும் நடவடிக்கைக்காக சென்ற போது, புதிய காட்டுப்பள்ளி வீதியிலுள்ள வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
15 வயது சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்தியதால் கர்ப்பம்
இதன்போது அந்த வீட்டில் இருந்த 15 வயது சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்தி அவரை கர்ப்பமாக்கியுள்ளார். பாடசாலை சென்று வந்த குறித்த சிறுமி கர்ப்பமடைந்த நிலையில் பாடசாலை செல்வதை நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் இன்றையதினம் அவருக்கு பிரசவ வலி எடுக்கவே வீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார். இவ்வாறு குழந்தையை பிரசவித்த அவர் அருகிலுள்ள பாழடைந்த காணியில் அந்த சிசுவை வீசியதாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரச உத்தியோகத்தர் கைது
இதனையடுத்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கர்ப்பத்திற்கு காரணமான 29 வயதான அரச உத்தியோகத்தர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், கைது செய்யப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஏறாவூர் காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.