எம்.பியையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், தவிசாளரை குறை கூறுவது விந்தையானது : சட்டத்தரணி குருபரன் வாதம்
சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு எதிராக வட மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட விசேட தனிநபர் விசாரணை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது.
ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் நகர சபைச் செயலாளர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.
இன்றைய விசாரணையின் முக்கிய அம்சமாக, இரண்டாம் குற்றஞ்சாட்டப்பட்டவரான உப தவிசாளர் ஞா. கிஷோர் சார்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகி வாதாடினார்.
ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு
கடந்த ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில், 50 ஆண்டுகளுக்கும் மேலான பழைய கட்டடங்களுக்கு 'தகுதிச் சான்றிதழ்' (COC) கோருவது குறித்து உப தவிசாளர் விமர்சித்திருந்தார். இந்த உரை உள்ளூராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலை மீறிய செயல் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே இன்றைய வாதங்கள் அமைந்தன.
உப தவிசாளரின் உரை குறித்து வாதாடிய சட்டத்தரணி குருபரன், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட விடயங்கள் குறித்துப் பேசுவதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு முழு உரிமை உண்டு எனச் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக உரிம வரி மற்றும் அது சார்ந்த துணை விதிகளை உருவாக்கும் அதிகாரம் சபைக்கு உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் நலன் சார்ந்து பேசுவது ஒரு உறுப்பினரின் கடமையாகும்.
உப தவிசாளர் எந்தவொரு அதிகாரியையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், பொதுக் கொள்கைகளைச் சரியான திசைக்குக் கொண்டு செல்லவே அவர் முயன்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தவிசாளர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த சட்டத்தரணி, "உப தவிசாளரின் பேச்சைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார்" என ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டைச் சாடினார்.
அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள்
யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களைக் குழப்பும் வகையில் பேசும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி தவிசாளருக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பது விந்தையானது என அவர் தெரிவித்தார்.
மேலும், முறையான அதிகாரப் பகிர்வுடன் இயங்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நீக்க முற்படுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பினார்.

குறிப்பிட்ட ஒரு கட்சி நகர சபையைக் கைப்பற்றும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்ற கேள்வி இரண்டாம் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு உள்ளதாக சட்டத்தரணி குருபரன் தனது வாதத்தில் சுட்டிக்காட்டினார்.
தற்போது அனைத்து சாட்சி விசாரணைகளும் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு வார காலத்திற்குள் எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விசாரணை அதிகாரி க. அரியநாயகம் தனது இறுதி அறிக்கையை வட மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |