மத்திய கிழக்கில் வலுக்கும் மோதல் : இந்தியப் பெருங்கடல் நாடுகளிடம் ரணில் கோரிக்கை
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்களைக் குறைப்பதற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய போர்ச் சூழல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இந்த வியடத்தினைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்திய நாடுகளின் மீது குண்டுகளை வீசித் தாக்குகின்றன. மறுபுறம் ஈரான், பிராந்தியத்தின் ஏனைய உறுப்பினர்களான வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல்களை நடத்துகின்றது.
மூழ்கடிக்கப்பட்ட ஈரானியக் கப்பல்
கடல்சார் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நமது கடல் பிராந்தியத்தில், ஈரானியக் கப்பல் ஒன்றை அமெரிக்கா நீர்மூழ்கிக் குண்டுத் தாக்குதல் மூலம் மூழ்கடித்துள்ளது.

இதற்கு முறையான எதிர்வினை ஆற்றாமை அல்லது குறைந்தபட்சப் பொறுப்பைக் கூட ஏற்காமை என்பது, இன்று நாம் அங்கீகாரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை உணர்த்துகிறது.
அதேவேளை, அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதையும், ஐரோப்பிய நாடுகள் தமக்கிடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதையும் நீங்கள் காண முடியும். ஆனால், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அத்தகைய எதனையும் காண முடியவில்லை.
இத்தகைய நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் தனிப்பட்ட மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இன்றி, நாம் எதிர்பார்க்கும் ஒருங்கிணைப்பை கட்டியெழுப்ப முடியாது. நாம் அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டும்.
உலகளாவிய விவகாரங்களில் இருந்து விலகுதல்
அரசியல் விவகாரங்கள், கடல்சார் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதார ஒருங்கிணைப்பு, மீன்பிடி, விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக பிராந்திய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாட வேண்டும் என நான் முன்மொழிகிறேன்.

நாம் நமது துறைமுகங்கள் மற்றும் விநியோக சேவைகளையும் மேம்படுத்த வேண்டும். எங்களிடம் கொழும்பு பாதுகாப்பு கலந்துரையாடல் மன்றம் உள்ளது. நாம் இணைந்து செயற்பட்டாலும், அரசியல் ரீதியான பார்வை குறித்து இன்னும் கவனம் செலுத்தவில்லை.
அமெரிக்கா இன்று உலகளாவிய விவகாரங்களில் இருந்து விலகிச் செல்கிறது. இது ஒருவகையில் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு வாய்ப்பளிப்பதாகக் கூறலாம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான ஒரு திட்டத்தை நாம் வகுக்க முடியும்.
இதன் மூலம், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்கள் ஊடாக, ஏனைய கடல் பிராந்தியக் குழுக்களைப் போல நமது பிராந்திய நாடுகளும் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவது குறித்து ஆராய முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |