இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் ஏன் -விளக்கமளித்துள்ள அரசாங்கம்
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் ஏன்
இன்றைய தினம் 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஏன் நியமிக்கப்பட்டனர் என்பதற்கு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் கீழ் 20 அமைச்சர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளதால் அனைத்து அரச நிறுவனங்களையும் செயற்படுத்த முடியாது. தனக்கு கீழ் உள்ள 35 நிறுவனங்களை உதாரணமாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைத்து நிறுவனங்களின் விவகாரங்களையும் தான் மட்டும் கையாள்வது கடினம் என்றார்.
எனவே இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமித்தால் அந்த நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை அவருக்கே வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சம்பளம்
“தற்போதைய சூழ்நிலையில் நிறுவனங்களின் நிலையை மேம்படுத்த இது எங்களுக்கு உதவும். இதனையடுத்து புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சம்பளத்தின் கீழ் பணியாற்றுவார்கள். எனவே, அவை அரசுக்கு சுமையாக மாறாது,” என விளக்கமளித்தார்.
கடந்த அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் என மொத்தம் 88 பேர் அமைச்சர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களுக்கு மேலதிக சம்பளம் அல்லது சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
