பல்பொருள் அங்காடிகளில் விலை மோசடி! நுகர்வோர் விசனம்
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினை பயன்படுத்தி பல்பொருள் அங்காடிகளில் உணவு பொருட்களின் விலைகளில் மோசடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எரிபொருட்களின் உயர்வு மற்றும் டொலரின் மதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ளது.
இந்த காரணத்தை பயன்படுத்தி அரிசி, சீனி, பருப்பு, பிஸ்கட், சவர்க்காரம், பட்டர், இனிப்பு பானங்கள், பால் மா, திரவ பால், கோழி இறைச்சி, முட்டை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல்பொருள் அங்காடிகளில் நியாயமற்ற முறையில் மிக அதிகளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.
விலைக் கட்டுப்பாடு இல்லை
மேலும், பல்பொருள் அங்காடியில் பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடு இல்லை எனவும், இந்த விடயத்தில் வர்த்தக அமைச்சரும் நுகர்வோர் அதிகார சபையும் நடவடிக்கைகள் எடுப்பதில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .
இந்நிலையில், முன்னர் விற்பனை செய்யப்பட்ட பொருட்களை அதிக விலையிலான விலைப்பட்டியல்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் மோசடி நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த மோசடி நடவடிக்கை குறித்து வர்த்தக அமைச்சர் அல்லது நுகர்வோர் அதிகார சபை கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.