ஆவாக்குழு பாணியில் வாள்வெட்டு: மட்டக்களப்பில் இருவர் படுகாயம்!
மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதையடுத்து இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, நேற்று முன்தினம் (20) இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தாக்குதலை நடத்தியவர்கள் தப்பியோடி தலைமறைவாகியுள்ள நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
அத்துடன், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கோவில் ஒன்றில் காயமடைந்தவர்களுக்கும் தாக்குதலை நடாத்திய வாள்வெட்டுக் குழுவிற்கும் இடையே இடம்பெற்ற தகராற்றினையடுத்து பழிவாங்கும் நோக்கோடு இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தள்ளது.
இந்த நிலையில், யாழில் ஆவாக்குழுவின் பாணியில் இடம்பெற்ற சம்பவத்தினால் பிரதேச மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
