ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருக்கு குற்றப்புலனாய்வு விடுத்துள்ள அழைப்பு!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை குற்றப் புலனாய்வு திணைக்களம் நாளை விசாரணை செய்யவுள்ளது. இது தொடர்பான அழைப்பை குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்றைய தினம் விடுத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக ஹரின் பெர்ணான்டோ அழைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் ஹரின் பெர்ணான்டோவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஹரின் பெர்ணான்டோவிற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட கூச்சல் நிலையை தொடர்ந்து சபா மண்டபத்திலிருந்து வெளியேறியபோது நாடாளுமன்ற வாசலில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவும் ஆளுங்கட்சி உறுப்பினர் ஜனக்க குட்டியாராச்சியும் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஹரின் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குட்டியாராச்சி வெளிவிவகார அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தனவிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகின்றது.