கேள்விக் கணைகளால் ரணிலுக்கு தொடர் அழுத்தம்
புதிய அரசாங்கத்திற்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிப்பதற்கு முன்னர் தமது கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனக் கோரி, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நாடு இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த தருணத்தில், நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வரும் எந்த தலைவருக்கும் தாம் உண்மையான ஆதரவை வழங்குவதாகவும் அவர்கள் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஏழு நிபந்தனைகளை முன்வைத்து கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

குறித்த நிபந்தனைகள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு தாம் தயார் என அவர்கள் கூறியுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் நிபந்தனை முன்வைத்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனைத் தவிர நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்குதல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறை ஒழிக்கப்பட வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
