நீதியரசர்களின் ஓய்வு வயது நீட்டிப்பு: அப்பட்டமான அரசியல் தேவை - ஹர்ஷ டி சில்வா காட்டம்
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீட்டிப்பதற்காக அரசு முன்னெடுக்கும் முயற்சிகள் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணானவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் தேவை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்துத் துறையினரினதும் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக ஒரு பொதுவான கொள்கை ரீதியிலான விவாதம் அவசியம்.

அதை விடுத்து திடீரென ஒரு சட்டமூலத்தைக் கொண்டுவந்து குறிப்பிட்ட சில நீதியரசர்களின் பதவிக்காலத்தை மாத்திரம் நீடிக்க முற்படுவது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது.
அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்வது என்பது வெறும் 8 அல்லது 16 நபர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காக இருக்குமாயின் அது ஓர் அப்பட்டமான அரசியல் தேவைக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.
தவறான நடவடிக்கை
இத்தகைய போக்கு நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் மயமாக்கிவிடும்.
முன்னொரு காலத்தில் நாடாளுமன்றத்தின் பலத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க முற்பட்டபோதும் பிரதம நீதியரசரைப் பதவியிலிருந்து நீக்கியபோதும் நாடு பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

அந்த மோசமான விளைவுகளை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம்.
எனவே அரசு எதிர்க்கட்சிகளின் குரல்களை மட்டுமன்றி நாட்டின் கல்விமான்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து இந்தத் தவறான நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |