கஞ்சா வியாபாரியான மருத்துவமனை ஊழியர் மடக்கி பிடிப்பு
மஹரகம வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் போதைப்பொருளுடன் வைத்தியசாலைக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட மிரிஹான ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 5 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 10 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
பொதி செய்து விற்பனை

வைத்தியசாலை ஊழியர் ஒருவர் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை பொதி செய்து விற்பனை செய்வதாக நுகேகொட பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் நிலைய கட்டளைத்தளபதி காவல்துறை பரிசோதகர் ஜனசாந்த கஹடதெனியவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் பணிக்கு வந்து கொண்டிருந்த போது அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் சிறிய பொட்டலங்களில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருள் பொதி செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப்பொருளுக்கு அடிமையான வைத்தியசாலை ஊழியர்கள்

குறித்த வைத்தியசாலையில் சுமார் 7 வருடங்களாக கடமையாற்றும் இவரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் போது போதைப்பொருளுக்கு அடிமையான பல வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் வெளியாட்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.