நிலவும் சீரற்ற காலநிலை : 21 மாவட்டங்கள் பாதிப்பு
நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்துள்ளார்.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று (30.05.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த 21 மாவட்டங்களில் 219 பிரதேச செயலக பிரிவுகள் அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
புயல் காற்று
இந்த 219 பிரதேச செயலக பிரிவுகளில் 2,249 குடும்பங்களைச் சேர்ந்த 8,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் காற்று நிலைமைகளால் பெரும்பாலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக, மண்சரிவுகளும் பாறைகள் உருண்டு விழுந்தமையும் இதில் அடங்கும். கடந்த 14ஆம் திகதி முதல் இன்று பிற்பகல் 10 மணி வரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்குவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதேபோல், 24 பேர் காயமடைந்துள்ளனர்.
முழுமையாக சேதமடைந்த வீடுகள்
இந்த காயமடைந்தவர்கள் ஏதேனும் ஊனமுற்ற நிலைக்கு உள்ளாகினால், அவர்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதேபோல், இந்த நிலைமையில் முழுமையாக சேதமடைந்த 07 வீடுகள் இதுவரை எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த 07 வீடுகளுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பகுதியளவு சேதமடைந்த 2,053 வீடுகள் எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மீளமைப்பு செய்து, அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். மேலும், 08 சிறு வியாபாரங்கள் சேதமடைந்துள்ளன.
அதேபோல், 31 உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன. இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே எங்களுக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த வீடுகளின் சேதங்களை மதிப்பீடு செய்தவுடன், அந்தத் தொகையை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்." என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
