அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை!
மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கையின் பருத்தித்துறைக்கு வடக்கு, வடகிழக்கு திசையில் 309 கி.மீ. தூரத்திலும் இந்தியாவின் கடலூருக்கு கிழக்காக 219 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டிருக்கும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுநிலையின் (Well Marked Low Pressure) அமுக்க சாய்வு விசையின் (Pressure Gradient Force - PGF) பற்றாக்குறையின் காரணமாக பல மணித்தியாலங்களாக ஒரே இடத்தில் நிலைகொண்டு தற்போது மிக மிகக் குறைவான வேகத்தில் நகருகின்றது.
ஆனாலும் அதன் சுழற்சி வேகமாக இயங்குகின்றது.
இதனால் அதன் மையம் அதிக ஈரப்பதனை உள்நோக்கி ஈர்க்கின்றது.
அதிகளவிலான ஈரப்பதன்
இந்த தாழ்வு நிலையின் மையம் ஈர்க்கின்ற அதிகளவிலான ஈரப்பதன் அரபிக் கடலிலிருந்து இலங்கையூடாக வங்காள விரிகுடாவை நோக்கி நகர்கின்றது.
இதனால் இலங்கையின் பல பகுதிகளும் பரவலாக கனமழையைப் பெறுகின்றன.

குறிப்பாக அரபிக்கடலிலிருந்து ஈரப்பதன் உள்நுழைகின்ற இலங்கையின் நிலப்பகுதிகளும் (மேல் மாகாணம், தென் மாகாணம், வடமேல் மாகாணம், வட மாகாணம், சப்ரகமுவ மாகாணம்) இலங்கையிலிருந்து ஈரப்பதன் வங்காள விரிகுடாவுக்கு வெளியேறுகின்ற இலங்கையின் நிலப்பகுதிகளும் (கிழக்கு, வடக்கு, ஊவா) கனமழையைப் பெறுகின்றன.
இந்த நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்வரும் (17.05.2026) வரை வங்காள விரிகுடாவில் நிலவும் என்பதனால் நாளை (16.05.2026) வடக்கு, கிழக்கு, மேற்கு, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, தெற்கு மாகாணங்கள் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
கடற்பகுதிகள்
நாளை மறுதினம் (17.05.2026) மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்கள் கனமழையையும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மிதமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே தொடர்ச்சியாக மழை கிடைக்கும் பகுதிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் மழை கிடைக்கும் என்பதனால் இப்பிரதேசங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

அதேவேளை மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நாளையும் நாளை மறுதினமும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் இம்மாகாணங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு அனர்த்தங்கள் இடம்பெறக்கூடும் என்பதால் மக்கள் மிக அவதானமாக இருப்பது மிகவும் அவசியம்.
எதிர்வரும் 18.05.2026 காலை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் அதுவரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |