ரணிலின் செயல் செல்லுபடியற்றது! நீதிமன்றத்திற்கு நாடியுள்ள சரத் பொன்சேகா
அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து அதிபர் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் செல்லுப்படியற்றது என உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானிக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் சட்டத்தரணி சுதத் விக்ரமரத்ன ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சட்டமா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, பொலிஸ் மா அதிபர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அதிபருக்கு அதிகாரமில்லை
அரச இரகசிய சட்டமூலத்தின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள், அந்த சட்டமூலத்தின் கீழ் இவ்வாறான உத்தரவை வெளியிட சிறிலங்கா அதிபருக்கு அதிகாரமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனடிப்படையில், தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதால், அதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பை வழங்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை,குறித்த வர்த்தமானி அறிவித்தல் செல்லுப்படியற்றது என்ற உத்தரவை பிறப்பிக்குமாறும், இந்த மனுவை விசாரித்து தீர்ப்பை வழங்கும் அவரை வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு இடைக்கால தடையை விதிக்குமாறும் மனுதாரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
