சம்பவ இடத்தில் போன உயிர்: பயங்கர போதைப்பொருள் பயன்படுத்திய சாரதி: அதிரடி கைதுகள்
வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்த மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய ஒருவருக்குப் பேருந்தைச் செலுத்த அனுமதி அளித்த குற்றச்சாட்டின் கீழ் பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (04) புளியங்குளம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில், அதில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதியைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் 'ஐஸ்' எனும் வீரியமிக்க போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில், குறித்த நபரின் சாரதி அனுமதிப்பத்திரமும் ஏற்கனவே காலாவதியாகியிருந்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.
உரிமையாளர் கைது
இதனையடுத்து, காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்த மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய ஒருவருக்குப் பேருந்தைச் செலுத்த அனுமதி அளித்த குற்றச்சாட்டின் கீழ், அப்பேருந்தின் உரிமையாளரைப் காவல்துறையினர் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |