சிங்களவர்களே உள்ளக விசாரணையை ஏற்காத போது தமிழர்கள் எப்படி ஏற்பது
காலம் எல்லாவற்றுக்கும் விடையளிக்கும். கடந்த காலத்தின் பல சிக்கல்களுக்கும் கேள்விகளுக்கும் இன்றைய காலம் விடையளித்துக் கொண்டிருக்கிறது. இதைப்போலத்தான் வரும் காலம் இன்னும் பல வெளிச்சங்களை உண்டாக்கும் என்று நம்புகிறோம்.
ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மற்றும் ஈழத் தமிழ் மக்கள் சந்தித்த இனப்படுகொலை சார்ந்த அனுபவங்கள்மீதும் காலம் தக்கதொரு பதிலை வழங்கும் என்ற நம்பிக்கையில்தான் எங்கள் நிலம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது.
காலம் நீதியையும் வரலாற்றின் புதிர்களுக்கு விடைகளையும் தரும் என்ற நம்பிக்கையில்தான் ஈழத் தமிழ் இனம் வாழ்வெனும் போராட்டத்தில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறது.
பெண் போராளிகளின் எலும்புக்கூடுகளா?
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் ஈழ நிலத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது. வீடுகள் தோறும் வாசல்படி என்பதைப் போல வீடுகள் தோறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களால் எங்கள் நிலம் துயரில் தோய்ந்திருக்கிறது.

வீடுகளில் ஒருவாகவோ, இருவராகவோ, ஏன் குடும்பம் குடும்பமாகவோ காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்துதான் இருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்ட பெண் போராளிகளின் குடும்பங்களில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி எத்தகைய தாக்கத்தை செலுத்தும். அந்த எலும்புக்கூடுகளையும், சீருடைகளையும் பார்க்கின்ற போது ஒரு தாயின் மனம் எப்படி துடிக்கும். எல்லாத் தாய்மார்களுக்கும் அது அவர்களின் பிள்ளையாக தெரியுமல்லவா?
கடந்த சில மாதங்களின் முன்னர் கொக்குத் தொடுவாயில் நீர்வழங்கல் வடிகால் சபை நீர் வழங்கல் சேவையை வழங்குவதற்காக அகழ்வுப் பணிகளை மேற்கொண்ட வேளையில், மனித உடல் எச்சங்களை மீட்டிருந்தனர். பெண் போராளிகள் அணியும் சீருடை மற்றும் ஏனைய உடைகள் அங்கு மீட்கப்பட்டன.
கடந்த செப்டம்பர் 16ஆம் திகதியுடன் ஒன்பதாவது நாளாக மீட்புப் பணிகள் இடம்பெற்றன. அத்துடன் இதுவரையில் 17பேரின் மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவைகள் யாவும் பெண் போராளிகளின் உடலங்கள் என்றுதான் சந்தேகிகப்படுகின்றன. அதற்கான ஆதாரங்களும் மீட்கப்பட்டுள்ளன.
எலும்புக்கூடுகளின் வாக்குமூலங்கள்
இதேவேளை ஒக்டோபர் மாதம் 3ஆம் வாரமளவில் மீண்டும் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கடந்த மே மாதம் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தலை ஈழத் தமிழினம் முள்ளிவாய்க்காலிலும் உலகம் முழுவதிலும் அனுஸ்டித்தது. இதனைத் தொடர்ந்த நாட்களில் கண்டுபிடிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம், ஜெனீவாவுக்கான ஈழத்தின் சாட்சியாகவே தென்படுகின்றது.
ஜே.ஆர் ஜயவர்தனவின் கொள்கைகளைப் பின்பற்றி இருந்தால் இலங்கை அபிவிருத்தி அடைந்திருக்கும் : ரணில் விக்ரமசிங்க
இப்போதும் ஜெனீவாவில் அமர்வு நடைபெறக்கூடிய தருணத்தில் கொக்குத் தொடுவாயில் இருந்து எழும் இச் சாட்சியங்கள் இனப்படுகொலைக்கான நீதிக்கு குரலிடுகின்றன. உண்மையில் இந்த எலும்புக் கூடுகளின் மொழியை இந்த உலகம் இன்னமும் கேட்காமல் இருப்பதுதான் வேதனை தருகின்றது.
இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் குரலை, இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் முகங்களை தாங்கிய இந்த எலும்புக்கூடுகளின் கனத்த குரலுக்கு என்றைக்கு இவ்வுலகம் செவி சாய்க்கப் போகிறது? கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில், சர்வதேச விசாரணை வேண்டும் என்று வடக்கு கிழக்கு முழு அளவிலான கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
இலங்கை அரசால் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளிலோ, அகழ்வுப் பணிகளிலோ ஈழத் தமிழ் மக்களுக்கு துளியேனும் நம்பிக்கை இல்லை என்பதற்கு கடந்த காலமே மிகப் பெரிய சாட்சியாகவும் விடையாகவும் இருக்கிறது.
இனவழிப்பின் காவலாக நீதித்துறை?
இலங்கைத் தீவில் நீதித்துறை என்பது உண்மையிலேயே நீதியை தமிழ் மக்களுக்கு பாரபட்சம் இன்றி வழங்கி இருந்தால் ஈழத் தமிழ் மக்கள் உள்ளக விசாரணையை நம்புவார்கள். ஏற்றுக்கொள்வார்கள். இன்னொரு விதத்தில் பார்த்தால், அப்படி இலங்கையில் நீதி இருந்திருந்தால், ஈழத் தமிழ் மக்கள் இத்தனைபேர் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள், ஈழத் தமிழர்களும் ஆயுதம் ஏந்திப் போராடி இருக்க மாட்டார்கள்.

மறுபுறத்தில் ஈழத் தமிழ் மக்கள்மீதான அனைத்துவிதமான ஒடுக்குமுடுறைகளின் போதும், உரிமை மறுப்புக்களின் போதும், இனப்படுகொலைகளின்போதும் அரசியலமைப்பும் நீதித்துறையும் காவலாகவே இருந்திருக்கிறது என்பது கசப்பான வெளிப்படை.
கடந்த 2009இல் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது மாத்திரமின்றி ஈழத் தமிழ் மக்கள் 1983 ஜூலை இனப்படுகொலை முதலே பன்னாட்டு நீதியை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகளாக வடக்கு கிழக்கில் சர்வதேச விசாரணை வழியாக நீதி முன்வைக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் பெரும் போராட்டமாகத் தொடர்கிறது.
பொதுமுடக்கம் போன்ற போராட்டங்களின் வழியாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களின் வழியாகவும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வழியாகவும் இந்தக் குரலை ஈழ தேசம் வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.
சர்வதேச விசாரணையை தென்னிலங்கை கோராலாமெனில்
அது மாத்திரமின்றி அரசியல் கட்சிகள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் வழியாக சர்வதேச விசாரணை வழியாக நீதியை பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதி அளித்த நிலையிலும் அக் கட்சிகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவை வழங்கி உள்ளனர்.

கடந்த காலத்தில் இலங்கை தமிழரசுச் கட்சி இந்தக் கோரிக்கயை முன்வைத்த நிலையில், மக்கள் பெரும் ஆதரவை அளித்த அதேநேரம், 2015 ரணில் – மைத்திரி ஆட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய ஆதரவு மக்கள் மத்தியில் கவலைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது.
அக் காலத்தில் தமிழரின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்த போதும் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் அளிக்காமல் ரணில் – மைத்திரி தரப்பு இனப்புடுகொலையாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதுடன் அதனை பகிரங்கமாகவும் ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில சர்வதேச விசாரணை கோரும் ஈழத் தமிழ் மக்களை குற்றவாளிகளாகச் சித்திரிக்கின்ற நிலை தென்னிலங்கை பேரினவாதிகள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால் இன்றைக்கு தென்னிலங்கையில் இருந்தே சர்வதேச விசாரணையை கோருகின்ற நிலை ஒன்று தோன்றியிருப்பதே காலம் ஏற்படுத்தியுள்ள தெளிவாகும்.
அன்று முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்த சமயத்தில், அதன் பின்னர் இனப்படுகொலை சார்ந்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட சமயத்தில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இலங்கை அரசை காப்பாற்றியதுடன் சர்வதேச தலையீட்டையும் எதிர்த்தார். அத்துடன் கோத்தபாய ராஜபக்சவை தேர்தலில் ஆதரித்தார்.
மறைமுகமாக ஏற்கிறதா சிங்கள தேசம்?
ஆனால் இன்று அவரே சர்வதேச விசாரணையை ஈஸ்டர் படுகொலை விவகாரத்தில் கோரி நிற்கிறார். 2009இல் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த ரஞ்சித் ஆண்டகை முனைந்திருந்தால், சரியாக பத்து ஆண்டுகளின் பின்னர் முள்ளிவாய்க்காலில் எம்மீது எறியப்பட்ட குண்டுகள் தென்னிலங்கை தேவாலயங்களில் வெடித்திருக்காது.

அதேபோல கடந்த காலத்தில் ஈழத் தமிழர் விடயத்தில் சர்வதேச தலையீட்டை ஏற்காதிருந்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இன்று சர்வதேச விசாரணை வழியாகவே ஈஸ்டர் படுகொலைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் இலங்கையில் நடக்கும் விசாரணையால் நீதி கிடைக்காது என்றும் கூறுகின்றார்.
அதேபோன்று கடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்தவர், போர் நடந்த சமயத்தில் பதில் பாதுகாப்புஅமைச்சராக இருந்தவர் மைத்திரிபால சிறிசேன. அவரும் இப்போது சர்வதேச விசாரணையே தேவை என்று வலியுறுத்தி உள்ளார்.
ஈழத் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணை கோரும் உரிமை கொண்டவர்கள் என்பதை கடந்த காலத்தில் ஈழம் வலியுறுத்தியே வந்துள்ளது. ஆனால் இன்றைய நிலையில் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை விடயத்தில் சர்வதேச விசாரணை கோர முடியும் என்பதை சிங்கள தேசமே வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாளன்று நடந்த ஈஸ்டர் படுகொலையில் 279பேர் கொல்லப்பட்டார்கள். இதற்காக சர்வதேச விசாரணை கோரும் உரிமை சிங்கள தேசத்திற்கு இருக்கிறது. அதேநேரம், கடந்த 1958ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இனப்படுகொலையால் பல லட்சம் ஈழத் தமிழர்கள் கொன்று அழிக்கப்பட்டுள்ளார்கள்.
முள்ளிவாய்க்காலில் மாத்திரம் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 1958இலிருந்து 1983இலிருந்து, 2009இலிருந்து நீதிக்காக உக்கிரமாகப் போராடும் ஈழத் தமிழினம் இன்றும் சிங்கள அரசின் பல நெருக்கடிகளின் மத்தியில் போராடும் ஈழத் தமிழ் இனம், சர்வதேச விசாரணைய கோருவது இவ் இனத்தின் உரிமை மாத்திரம் இல்லை. இலங்கை இனப் பிரச்சினைக்கான நிரந்த தீர்வுக்கான ஒற்றை வழியுமாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 18 September, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.