உரம் விற்று அரச ஊழியருக்கு சம்பளம் வழங்கும் சிறிலங்கா
யூரியா உரத்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் கடந்த டிசம்பர் மாதம் அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று (10) விவசாய அமைச்சில் இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயத் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
உரத்தை விற்று சம்பளம்
கடந்த சிறுபோகம் மற்றும் இந்த முறை பெரும் போகத்திலும் யூரியா உரங்கள் மற்றும் ஏனைய உரங்களை விற்பனை செய்த விவசாய அபிவிருத்தி திணைக்களம் 1000 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
குறித்த பணம் திறைச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் கடந்த டிசம்பர் மாதத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தை வழங்குவதற்காக குறித்த பணத்தின் ஒரு பகுதியை பயன்படுத்த அரசாங்கத்திற்கு வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அரிசி கொள்வனவிற்கு பணம் தேவை
மேலும், அடுத்த வார இறுதிக்குள் சில பிரதேசங்களில் இந்த வருட நெல் அறுவடை ஆரம்பிக்கப்படவுள்ளதால், அரிசியை கொள்வனவு செய்வதற்கு அரிசி சந்தைப்படுத்தல் சபைக்கு குறைந்தது 10 பில்லியன் ரூபாய் தேவைப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
