எப்படி கொல்லப்பட்டார் அல் ஜவாஹிரி - மீண்டும் ஒருமுறை தன்னை வல்லரசு என நிரூபித்தது அமெரிக்கா
பதுங்கியிருந்தவர் கண்டுபிடிப்பு
அல்-கொய்தா அமைப்பின் தலைவர் அல்-ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவரை பல ஆண்டுகளாக அமெரிக்க படை தேடி வந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பவரை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது.
அல்-ஜவாஹிரி, தான் வசித்த வீட்டில் இருந்து வெளியே எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவர் பல்கனி அருகே வரும் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.
அல்-ஜவாஹிரி தங்கியிருந்த வீடு
ஹெல்பயர் ஆர் 9 எக்ஸ் ரக ஏவுகணை
அல்-ஜவாஹிரி மீது மட்டும் தாக்குதல் நடத்த வேண்டும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்த அமெரிக்கா, துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஹெல்பயர் ஆர் 9 எக்ஸ் ரக ஏவுகணையை பயன்படுத்தியது.
இந்த ஏவுகணை எம்.க்யூ-9 ரீப்பர் டிரோனில் (ஆளில்லா விமானம்) பொருத்தப்பட்டு கொண்டு செல்லப்படும். அதிநவீன கமரா உள்ளிட்ட வசதிகளை கொண்ட ஆளில்லா விமானம் இலக்கின் மேலே பறந்து செல்லும். லேசர் கருவி பொருத்தப்பட்ட ஆர் 9 எக்ஸ் ஏவுகணை இலக்கை நோக்கி ஏவப்படும். இலக்கின் மீது மோதுவதற்கு முன்பு ஏவுகணையின் பக்க வாட்டில் இருந்து 6 பிளேடுகள் வெளியாகும். அதன்பின் இலக்கு வைக்கப்பட்ட நபர் மீது மோதும் ஏவுகணை அவரது உடலை துண்டு துண்டாக்கி விடும்.ஏவுகணை வெடிக்காது. இதன்மூலம் இலக்கு மட்டும் அழிக்கப்படும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இந்த நவீன ஏவுகணையை தான் அல்-ஜவாஹிரியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்தியது. தாக்குதலின்போது அல்-ஜவாஹிரி வீட்டில் அவரது உறவினர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.அல்-ஜவாஹிரி மட்டும் கொல்லப்பட்டார்.
ஆளில்லா விமானம்
முதலில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அதன்பின் ஆர்-9-எக்ஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.அல்-ஜவாஹிரியை கொல்ல இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன.
இதற்கு முன்பு ஆர்-9-எக்ஸ் ஏவுகணை முதல் முறையாக கடந்த 2017-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. சிரியாவில் அல்-கொய்தா தளபதி அபு அல்-கைர் அல்-மஸ்ரி, காரில் சென்றபோது அந்த கார் மீது ஆர்-9-எக்ஸ் ஏவுகணையால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக புகைப்படங்களில் காரின் மேல்புறத்தில் ஓட்டை இருந்தது. காரின் முன் மற்றும் பின்புறத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை.
தாக்குதலுக்கு பயன்படுத்திய ஏவுகணை
உறுதிப்படுத்த கால அவகாசம்
அல்-ஜவாஹிரி இந்த ஆண்டு தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக காபூலில் உள்ள வீட்டுக்கு இடம்பெயர்ந்ததை அமெரிக்க உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அது அல்-ஜவாஹிரி தானா என்பதை உறுதிப்படுத்த நேரம் எடுத்துக் கொண்டனர்.
தாக்குதலின் பின் மேலெழும்பும் தீச்சுவாலை
முகத்தை புகைப்படம் எடுத்த உளவுத்துறை
அல்-ஜவாஹிரி தனது வீட்டு பல்கனிக்கு வரும் போது அவரது முகத்தை புகைப்படம் எடுத்து ஸ்கான் செய்து அது அவர் தான் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் தாக்குதலுக்கான திட்டம் மே மாதம் வகுக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி வீட்டின் கட்டமைப்பு, அவரது குடும்பத்தினரின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டது.
