மனிதப் புதைகுழிகளை ஆய்வு செய்ய சர்வதேச தலையீடு தேவையில்லை : அரசாங்கம் அறிவிப்பு
செம்மணி போன்ற பாரிய மனிதப் புதைகுழிகளில் மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகளை மேலதிக ஆய்விற்கு உட்படுத்துவதற்கு சர்வதேச நிபுணர்களின் உதவி தேவைப்படலாம் என்றும் வேறு வகையான சர்வதேச தலையீடு தேவையில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தினை தேசிய ஒருங்கிணைப்பு விவகாரங்களிற்கான பிரதியமைச்சர் முனீர் முலாபர் (Mohommed Muneer) தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது நடைபெறும் அகழ்வு நடவடிக்கைகளிற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நிபுணத்துவம்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளிற்கு சர்வதேச உதவி தேவை என வடக்கின் சில குழுக்கள் வேண்டுகோள் விடுத்து வந்துள்ளன. தற்போதைய அரசாங்கம் இந்த அகழ்வு தொடர்பில் எந்த தடங்கல்களையும் தடைகளையும் ஏற்படுத்தவில்லை.
நேர்மையான விசாரணைக்கான சூழ்நிலை ஏற்கனவே உள்ளது, எங்களுக்கு சர்வதேச நிபுணத்துவம் தேவைப்பட்டால் உதாரணத்திற்கு எலும்புக்கூடுகளை அடையாளம் காண்பதற்கு அல்லது மேலதிக நவீன தடயவியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அது குறித்து ஆராய்வதற்கு நாங்கள் தயார்.
இதனை தவிர வேறு சர்வதேச தலையீடுகளிற்கு அவசியமில்லை. ஏனென்றால் நாங்கள் முழு ஆதரவையும் வழங்குகின்றோம்“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
