யாழ். செம்மணியில் மனித புதைகுழி...! தொடர்ந்து மீட்கப்படும் எலும்புக் கூடுகளால் அச்சம்
யாழ்ப்பாணம் (Jaffna) - செம்மணிப் பகுதியில் அமைந்துள்ள அரியாலை சிந்துபாத் மயானத்தில் எலும்புக் கூடுகள் மீட்கப்படுவது பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.
இந்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் நேற்று வியாழக்கிழமை (13) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த மயானத்தில் நல்லூர் பிரதேச சபையினால் மின்தகன எரியூட்டி அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எரியூட்டி அமைப்பதற்காக கிடங்கு
குறித்த மயானத்திற்குள் எரியூட்டி அமைப்பதற்காக நல்லூர் பிரதேச சபையினால் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எரியூட்டி அமைப்பதற்காக கிடங்கு வெட்டிய போது மண்டையோடு உட்பட்ட மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து ஒப்பந்ததாரர்களால் நல்லூர் பிரதேச சபைக்கு இவ்விடயம் தெரிவிக்கப்ட்டது.
எலும்புகூடுகள் மனித எச்சங்கள்
இதன் தொடர்ச்சியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரதே சபைச் செயலர் உள்ளிட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் இதனை பார்வையிட்டனர்.
இந்நிலையில் எலும்புகூடுகள் மனித எச்சங்களாக இருக்கலாம் அல்லது கிறிஸ்தவ மனித எச்சங்களாக இருக்கலாம் எனச் சந்தேகித்த ஒப்பந்ததாரர்கள் தம்மால் தொடர்ந்தும் பணியாற்ற முடியாது எனத் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்திய பிரதேச சபைச் செயலாளர் மயான அபிவிருத்தி சபையிடம் இது குறித்து தெரிவித்ததுடன் குறித்த ஒப்பந்தத்தின் தொடர் பணிகளை முன்னெடுக்குமாறு கேட்டுள்ளார்.
இந்த எலும்பு கூடுகள் எப்படி எங்கிருத்து வந்தது என்பது தொடர்பில் பலரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
செய்திகள் - பிரதீபன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)