அமெரிக்காவின் பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் தொடர்பில் இலங்கையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள சந்தேகம்!
அவசரமாக உற்பத்தி செய்யப்படும் கொவிட் தடுப்பூசிகள் தரமானயானது இல்லை என்று இலங்கையின் சிரேஸ்ட தொற்று நோயியல் நிபுணரும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
மொடர்னா, பைசர் போன்ற சில வகை தடுப்பூசிகள் அவசர அவசரமாக உற்பத்தி செய்யப்பட்டவை எனவும் இவற்றின் செயற்திறன் குறித்து சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மரபணுக்கள் மாற்றியமைக்கப்பட்ட உணவு வகைளுக்கு ஐரோப்பாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மொடர்னா, பைசர் போன்ற தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய நோய்களுக்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளைப் போன்றல்லாது கொவிட் தடுப்பூசிகள் அவசரமாக தயாரிக்கப்பட்டவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போலியோ, அம்மை போன்ற நோய்களுக்கான தடுப்பூசி கண்டு பிடிப்பதற்கு பல ஆண்டுகள் ஆய்வு நடாத்தப்பட்டதாகவும் அவர் எடுத்துக்காட்டியுள்ளார். கொவிட் தடுப்பூசிகள் மிக அவசரமாக தயாரிக்கப்பட்டவை என்பதனால் அவை சில நேரங்களில் செயற்திறன் இன்றியிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொடர்னா, பைசர் ஆகிய தடுப்பூசிகளை விடவும் சினோபார்ம், ஸ்புட்னிக்வீ மற்றும் அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசிகள் செயற்திறன் கூடியவை என்பதே தமது நிலைப்பாடு என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.