பெலவத்தை வர்த்தகர் கொலையில் சிக்கிய முதல் சந்கேகநபர்கள் - விசாரணை தீவிரம்
பெலவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் நீச்சல் குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதிகளை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் இன்று (05) கைது செய்துள்ளனர்.
23 மற்றும் 27 வயதுடைய கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெளிநாடு செல்ல முயற்சித்ததாகவும் குறித்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
வர்த்தகரின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த கணவனும் மனைவியும் கடவத்தையில் உள்ள பிரபல சந்தைக்கு முன்பாக கைது செய்யப்பட்டதாக கந்தானை காவல்நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் காமினி ஹேவாவிதாரண தெரிவித்தார்.
சடலம்
கைது செய்யப்பட்ட தம்பதியினர் கொத்தடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த வர்த்தகர் கடந்த 30ஆம் திகதி காணாமல் போயிருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு பின்னர், எம். டி. எச்.இல் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடிகளைக் கொண்ட அவரது ஆடம்பர வீட்டின் நீச்சல் தடாகத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தொழிலதிபரை கொன்ற பின்னர், அவருடைய மகிழுந்து கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் சென்றதுடன், மூன்றாம் நாள் மகிழுந்து நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மகிழுந்து காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இரகசிய தகவலுக்கு அமைய
குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உட்பட பல குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வரும் வேளையில், கந்தானை காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் காமினி வழங்கிய இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
