வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களால் முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத செயற்பாடுகள் : அம்பலப்படுத்திய ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவில் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிமாவட்ட கடற்றொழிலார்கள் ஊடாகவே முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் ஊடுருவல்கள் இடம்பெறுவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் நீரியல்வள பணிப்பாளர் நாயகம் ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான புகைப்பட ஆதாரங்களை கடற்றொழில் அமைச்சரிடம் நேரடியாகக் கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறும் வலியுறுத்தினார்.
முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள்
முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் இன்று(11.08.2026) இடம்பெற்ற இவ்வாண்டிற்கான இரண்டாவது முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில்சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவ்வாறு முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளின் புகைப்பட ஆதாரங்கள் எம்மிடம் கடற்றொழிலாளர்களால் கையளிக்கப்பட்டுள்ளன.
புகைப்பட ஆதாரங்கள்
அந்த புகைப்பட ஆதாரங்களை நான் ஏற்கனவே தங்களிடம் கையளித்திருக்கின்றேன். இருப்பினும் இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் எமது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறுவது தொடர்பிலான புகைப்பட ஆதாரங்களை மீண்டும் தங்களிடம் கையளிக்கின்றேன்.

அத்தோடு வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு, முல்லைத்தீவு மாவட்டத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வழங்குகின்றார்.
அவ்வாறு மீன்பிடிக்கான அனுமதியைப் பெறுபவர்கள் இங்கு வந்து சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கு முள்ளிவாய்க்காலில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடுமையாக பாதிப்பு
இந்நிலையில் குறித்த தென்னிலங்கையைச் சேர்ந்த கடற்றொழிலாளர், சாலைப் பகுதியில் ஐந்து படகுகளை வைத்து சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக கடற்றொழிலாளர்கள் எம்மிடம் முறையீடு செய்துள்ளனர்.

இவ்வாறாகத்தான் எமது முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் ஊடுருவுகின்றன. இவ்வாறு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு வழங்குகின்ற அனுமதிகளாலேயே, எமது மாவட்ட கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே எமது மாவட்டத்தில், வெளிமாவட்ட கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான அனுமதிகள் வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும். எமது கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறே நாம் கோருகின்றாம்.
இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கடற்படையினரும், காவல்துறையிரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எனவே சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முற்றாக கட்டுப்படுத்தப்படவேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.
செம்மணியில் இன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புக்கூட்டு தொகுதிகள் : சான்று பொருட்களும் மீட்பு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |