கனடா மோகத்தால் சிக்குண்ட 38 இலங்கையர்கள் - கவலையுடன் வெளியிட்டுள்ள தகவல்
சட்டவிரோதமான முறையில் கனடாவுக்குச் செல்ல முயற்சித்த நிலையில் இந்திய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு கர்நாடகா மாநிலத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 38 இலங்கையர்கள் தம்மை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய தேசிய புலனாய்வு குழுவின் விசாரணையில் தாங்கள் ஆட்கடத்தல் காரர்களால் ஏமாற்றப்பட்டுள்ளவர்களாக உறுதிசெய்யப்பட்டுள்ள போதும், தொடர்ந்தும் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத பயணம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சட்டவிரோதமான முறையில் கனடாவுக்குச் செல்ல முயற்சித்த நிலையில் 38 இலங்கையர்கள் இந்தியாவின் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர்.
தமிழர் தாயக பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டதுடன், ஆட்கடத்தல் முகவர்களால் தங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 26 பேரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐந்து பேரும், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 02 பேரும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.