மட்டக்களப்பில் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பு - அதிரடியாக செயற்பட்ட அதிகார சபையினர் (படங்கள்)
மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள நாவலடி பகுதியில் அரச காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டிய கம்பி வேலிகளை மாகாவலி அதிகார சபையினர் இடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வாழைச்சேனை கொழும்பு வீதியிலுள்ள நாவலடி தொடக்கம் ஜெயந்தியாலை பிரதேசம் வரையிலான தொடருந்து தண்டவாளத்துக்கும் வீதிக்கும் இடையிலான 28 ஏக்கர் அரச காணிகளை நாவலடி ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த காணி அபகரிப்பாளர் சிலர் உள்நுழைந்து காட்டு மரங்களை வெட்டி சட்டவிரோதமாக அபகரித்து அதற்கு முள் கம்பி வேலிகள் நாட்டி கட்டடங்கள் கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
இரண்டு நாள் அவகாசம்

இந்த சட்டவிரோத காணி அபகரிப்பு பேசும் பொருளாக மாறிய நிலையில் நேற்று முன்தினம் வாழைச்சேனை காவல்துறையினர் சென்று காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்களிடம் இது அரச காணி இந்த காணிகளுக்கு அமைக்கப்பட்ட கம்பி வேலிகளை அகற்றிக் கொண்டு உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறு இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவைகளை அகற்றிச் செல்வதற்கு இரண்டு நாள் அவகாசம் தருவதாகவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான இந்த காணிகளை அபகரித்துள்ளமையையடுத்து சம்பவதினமான இன்று மகாவலி அதிகாரசபை காவல்துறையினர் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் அத்துமீறி அபகரித்து முள் கம்பி வேலி அமைத்து மற்றும் கட்டிய கட்டடங்கள் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளி அவைகளை அகற்றியுள்ளனர்.
