தலைவர் பிரபாகரனின் சுதுமலைப் பிரகடனத்தின் தீர்க்கதரிசனம்…
உலகில் அதிகம் பேசாமல் செயல்களால் மதிப்பு பெற்ற தலைவராக எமது தமிழ் இனத்தின் தேசிய தலைவர் விளங்குகிறார். தன் வாழ்வையும் தமிழ் இனத்தின் விடுதலைக்காக முழுவதுமாக தந்த தலைவர் பிரபாகரன் அவர்கள், உன்னத தலைவராக எங்கள் மண்ணில் இன்னமும் பெறுகின்ற மதிப்பும் வாழ்தலும் என்றைக்குமானது.
தமிழீழ தேசத்தை அமைக்கும் விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு செயல்களையும் நேர்த்தியோடு முன்னெடுத்த தலைவர் அவர்கள், அதற்கு எதிராக வந்த தடைகளையும் சூழ்ச்சிகளையும்கூட கையாள்வதில் தீர்க்கதரிசனமான அரசியல் அணுகுமுறையைக் கையாண்டார்.
ஒரு சிறுவனாக ஈழத் தமிழ் இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தை கையில் எடுத்த நாட்களில் இருந்தே மாபெரும் ஆளுமையாக அவர் உருவெடுத்தார் என்பது நம் காலத்தின் மகத்துவமும் வியப்பூட்டும் வீரமும் தான்.
தலைவர் பிரபாகரன்
தலைவர் பிரபாகரன் அவர்களை இன்றைய தலைமுறையினர் ஏதோ ஒரு விதத்தில் தேடுகின்றனர். தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகள் மிக இளைய வயதிலேயே இனத்திற்காக ஒழுக்கத்துடனும் வீரத்துடனும் கட்டுக்கோப்புடனும் சிந்தித்து செயலாற்றினார்கள்.

அந்த வகையில் ஈழ மண்ணிற்கு மாத்திரமின்றி உலகின் அனைத்துச் சமூகங்களினதும் இளைய தலைமுறையினருக்கு மிகப் பெரும் உத்வெகத்தையும் சமூகப் பற்றையும் ஒழுக்கத்தையும் கட்டுப்போப்பையும் கற்றுக்கொடுப்பதில் எங்கள் போராளிகள் முன்னூதாரணமான கதாநாயர்கள்.
அவர்களைப் பற்றிய உரையாடல் என்பது எமது விடுதலைக்கானது என்பதுடன் எமது சமூகத்தை புடம் போடவும் அவசியமானது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
விடுதலைப் போராட்ட காலம்
தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட போராளிகள் அன்றைக்கு ஆயுதம் ஏந்தியது ஈழத்தில் இனி எந்த தலைமுறையும் ஆயுதம் ஏந்தக் கூடாது என்பதற்காகவே.

அதேவேளை எமது இனத்திற்கும் சமூகத்திற்கும் அழிவினை தரும் எந்த ஆயுதங்களையும் ஏந்தக் கூடாது என்பதையும் ஆக்கத்தையும் நீதிக்கும் விடுதலைக்கும் சமூக மேம்பாட்டிற்குமான நற்செயல்களையெ செய்ய வேண்டும் என்பதையும் விடுதலைப் போராட்ட காலம் எமக்கு அறிவூட்டியுள்ளது.
இதனால்தான் ஈழ மண்ணில் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை வரலாறு பாடமாகத் தருகிறது.
இலங்கையில் இனவழிப்புக்கள்
1987ஆம் ஆண்டில் இலங்கை – இந்திய ஒப்பந்தம் நடந்தது. ஜூலை 29ஆம் நாளன்று சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையில் இனவழிப்புக்கள் அதிகரித்த நிலையில் ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு கோரிய விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்த சூழலில் இந்தியாவின் தலையீடும் பங்களிப்பும் கணிசமான இருந்தது.
எனினும் அப்போதைய சூழலில் சிறிலங்கா அரசுக்கு சாதகமாக இந்தியா மேற்கொண்ட அணுகுமுறையாக இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்து 13ஆவது திருத்தம் இலங்கை அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்டது.
13ஆவது திருத்தம்
இந்த நிலையில் ஒப்பந்தம் நடைபெற்று ஆறு நாட்களில் ஈழத்தின் யாழ்ப்பாணத்தின் சுதுமலையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் மக்கள் முன்னிலையில் தோன்றி உரையாற்றினார்.

விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்து ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகள் கடந்த நிலையில் தன் சீரிய செயல்களாலும் கருத்துக்களாலும் ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி இந்தியா மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த தலைவர் பிரபாகரன் அவர்களைக் காண ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்தனர்.
அன்றைக்கு இந்தியா மேற்கொண்ட அணுகுமுறை தவறானது என்பதையும் 13ஆவது திருத்தம் ஈழத் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை தீரக்கப் போதுமானதல்ல என்பதையும் அதை நிராகரித்துத் தொடரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவாக சுதுமலையில் திரண்ட மக்களின் எழுச்சி விளங்கியிருந்தது.
37ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் பிரபாகரன் அவர்கள் 13ஆவது திருத்தம் தொடர்பில் வெளிப்படுத்திய பார்வை மிகவும் தீர்க்கதிரசனமானது என்பதை போருக்குப் பிந்தைய 15 வருடங்களும் இன்னும் அதிகமாக உணர்த்தி நிற்கின்றது.
விடுதலைப் புலிகள் களத்தில் இல்லாத இந்தக் காலம் சிறிலங்கா அரசின் தொடரும் இனவழிப்பையும் ஈழப் பிரச்சினைக்கு எந்த தீர்வையும் முன்வைக்காத அணுகுமுறையையும் 13என்பது ஏமாற்று வித்தை என்பதையம் தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.
அந்த வகையில் இதேபோல் ஒரு நாளில் சுதுமலையில் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஆற்றிய அந்த உரையை மீண்டும் நாம் நோக்குவது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழீழ மக்களே
எனது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே…
இன்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. திடீரென எமக்கு அதிர்ச்சியூட்டுவதுபோல, எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல இந்தத் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவுகள் நமக்குச் சாதகமாக அமையுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

திடீரென மிகவும் அவசரமாக, எமது மக்களையோ, எமது மக்களின் பிரதிநிதியாகிய எம்மையோ கலந்தாலோசிக்காமல் இந்தியாவும் – இலங்கையும் செய்துகொண்ட ஒப்பந்தம் இப்போது அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் டெல்லி செல்லும்வரை இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. பாரதப் பிரதமர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லி டெல்லிக்கு அவசரமாக அழைத்துச் சென்றார்கள்.
அங்கு சென்றதும் இந்த ஒப்பந்தம் எமக்குக் காண்பிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன - பல கேள்விக்குறிகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுமா? என்பதைப் பற்றி எமக்குச் சந்தேகம் எழுந்தது.
ஆகவே, இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய அரசுக்குத் தெள்ளத்தெளிவாக விளக்கினோம். ஆனால், நாம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாமல் போனாலும் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம் என இந்திய அரசு கங்கணம் கட்டி நின்றது.
இந்திய அரசின் நிலைப்பாடு
இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாம் ஆச்சரியப்படவில்லை. இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது, பிரதானமாக இந்திய – இலங்கை உறவு பற்றியது. இந்திய வல்லாதிக்க வியூகத்தின் கீழ் இலங்கையைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் அடங்கியிருக்கின்றன.

இலங்கையில் அந்நிய நாசகாரச் சக்திகள் காலூன்றாமல் தடுக்கவும் இது வழிவகுக்கிறது. ஆகவேதான், இந்திய அரசு அதிக அக்கறை காட்டியது. ஆனால், அதேசமயம் ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் இந்த ஒப்பந்தம் அமைகிறது.
ஆகவேதான், எமது மக்களைக் கலந்தாலோசிக்காது எமது கருத்துகளைக் கேளாது இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதை நாம் கடுமையாக எதிர்த்தோம். ஆனால், நாம் எதிர்த்ததில் அர்த்தமில்லை. எமது அரசியல் தலைவிதியை எமது வல்லமைக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் வல்லரசு நிச்சயிக்க முடிவு செய்திருக்கும்போது நாம் என்ன செய்வது? இந்த ஒப்பந்தம் எமது இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல் லட்சியத்தைப் பாதிக்கிறது.
எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது. எமது ஆயுதப் போராட்டத்துக்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. பதினைந்து வருடங்களாக ரத்தம் சிந்தி, தியாகம் புரிந்து, சாதனை ஈட்டி, எத்தனையோ உயிர்பலி கொடுத்துக் கட்டி எழுதப்பட்ட ஒரு போராட்ட வடிவம் ஒருசில தினங்களில் கலைக்கப்படுவதென்றால் அதை நாம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.
திடீரென கால அவகாசமின்றி எமது போராளிகளின் ஒப்புதலின்றி, எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இன்றி இந்த ஒப்பந்தம் எம்மை நிராயுதபாணியாக்குகிறது. ஆகவே, நாம் ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தோம். இந்தச் சூழ்நிலையில் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி என்னை அழைத்துப் பேசினார். அவரிடம், எமது பிரச்சினைகளை மனம்திறந்து பேசினேன். சிங்கள இனவாத அரசின் மீது எமக்குத் துளிகூட நம்பிக்கை இல்லை என்பதையும், இந்த ஒப்பந்தத்தை அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்தேன்.
எமது மக்களின் பாதுகாப்புப் பிரச்சினை பற்றியும் அதற்கான உத்தரவாதங்கள் பற்றியும் பேசினேன். பாரதப் பிரதமர் எமக்குச் சில வாக்குறுதிகள் அளித்தார். எமது மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தார். பாரதப் பிரதமரின் நேர்மையில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.
அவரது உறுதிமொழிகளில் நம்பிக்கை இருக்கிறது. சிங்கள இனவாத அரசு மீண்டும் தமிழர் இன அழிப்பு நடவடிக்கையில் இறங்க, இந்தியா அனுமதிக்காது என நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கையில் தான் நாம் இந்தியச் சமாதானப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க முடிவு செய்கிறோம்.
சிங்கள இனவாதம்
நாம் எமது மக்களின் பாதுகாப்புக்காக எத்தனை அளப்பரிய தியாகங்களைப் புரிந்தோம் என்பதை நான் இங்கு விளக்கிக் கூறத் தேவையில்லை. எமது லட்சியப் பற்றும் தியாக உணர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை எமது மக்களாகிய நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்களது பாதுகாப்புக்காக, உங்களது விடுதலைக்காக, உங்களது விடிவுக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம்.

ஈழத் தமிழரின் ஒரே பாதுகாப்பு சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடம் பெற்றுக்கொள்வதிலிருந்து மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது, இந்தப் பொறுப்பு மாற்றத்தைக் குறிக்கிறது. நாம் ஆயுதங்களைக் கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை.
இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய வீரருக்கு எதிராக நாம் ஆயுதங்கள் நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடம் இருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவருடைய உயிருக்கும், பாதுகாப்புக்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு அடித்துக் கூற விரும்புகிறேன்.
இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர, எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம். ஆனால், இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை.
சிங்கள் இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. தமிழீழத் தனியரசே, தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு. தமிழீழ லட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன்.
சுதுமலைப் பிரகடனம்
போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால், போராட்ட லட்சியம் மாறப்போவதில்லை. எமது லட்சியம் வெற்றி பெறுவதானால், எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும். தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால், நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபெறப் போவதில்லை.

முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்” என்று தனது உறுதியான நிலைப்பாட்டினையும் ஈழத்தமிழர்களின் எதிர்காலவாழ்வு தொடர்பிலான தீர்க்கதரிசனத்தையும் முன்வைத்திருந்தார்.
வல்லரசுகளின் கட்டளைகளுக்கு அடிபணியாத வல்லுறூகளின் அதிகார இறுமாப்புகளுக்கு அடங்காத பந்த பாசங்களுக்குள் முடங்கிவிடாத யாருக்கும் விலைபோகாத தேசத்தலைமகனின் அந்த அன்றைய வார்த்தைகளே சுதுமலைப் பிரகடனமாகியது.
ஈழத்தமிழர்களின் தேசநலனில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை தெட்டத்தெளிவாக ஈழத்தமிழர்கள் உணர்ந்துகொள்ளும்படியாக, இன்றுவரை ஈழத்தமிழர்கள் தங்கள் முடிசூடா மாமன்னனாகவே கொண்டாடுகின்ற தேசிய தலைவரினால் நிகழ்த்தப்பட்ட, பல வரலாற்று பதிவுகளுக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அடுத்தகட்ட பரிமாணத்துக்குமான ஒரு அடித்தளமாக விளங்கிய சுதுமலை பிரகடத்தையும் அது இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அன்றைய ஓகஸ்ட் நான்காம் நாளினையும் ஈழத்தமிழர்கள் இலகுவில் மறந்து விட மாட்டார்கள்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்