மின் துண்டிப்பு தொடர்பில் மின் சக்தி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
யுகதனவி மின் உற்பத்தி நிலையம் சம்பந்தமாக அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை குறித்து எதிர்வரும் திங்கள் கிழமை அமைச்சரவையில் கலந்துரையாடவுள்ளதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே(Gamini Lokuge)தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இனிவரும் காலங்களில் எந்த விதத்திலும் அவசர மின் விநியோக தடையேற்படாது எனவும் மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் கூறியுள்ளார்.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ள நிலையில், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இதனடிப்படையில், மின் விநியோக தடை ஏற்படாது. எவ்வாறாயினும் அண்மையில் ஏற்பட்ட திடீர் மின் விநியோக துண்டிப்பு சீர்குலைவு நடவடிக்கையா என்பதை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என மேலும் தெரிவித்துள்ளார்.