இந்தியா தொடர்பில் இலங்கையிலிருந்து வெளியான முக்கிய தகவல்
அரசியல், பொருளாதாரம் மற்றும் அண்டைநாடு என்ற வகையில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் ஆழமான உறவு நிலை காணப்படுகிறது.
எனவே இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை இலங்கையில் முன்னெடுக்க முடியாது.
இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க.
சமகால அரசியல், மற்றும் பொருளாதரம் தொடர்பில் நிகழ்நிலை முறைமை ஊடாக இன்று இடம் பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. நாம் அதனுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அத்துடன் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டும்.
சீனா அனைத்து நாடுகளுக்கும் உதவி செய்யாது. இலங்கை பொருளாதாரத்தில் எதிர்பார்க்கத்தக்க வகையில் முன்னேற்றம் அடைந்தால் தான் சீனா இலங்கைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். தற்போதைய சூழ்நிலையில் சீனாவை தவிர ஏனைய நாடுகள் இலங்கைக்கு உதவி செய்யாது.
வெளிவிவகார கொள்கைகளை ஏனைய நாடுகளின் தேவைக்கேற்ப வகுக்கக் கூடாது.
அரசாங்கம் வெளிவிவகார கொள்கையினை பிற தரப்பினருக்கு ஏற்றாற்போல் மலினப்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.