இம்ரான் கானுக்கு 85% பார்வை இழப்பு...! பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு மாற்றம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கானுக்குக் கண் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் உள்ள கடினமான சூழல்களாலும் போதிய மருத்துவ வசதிகள் வழங்கப்படாததாலும் இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீதப் பார்வை இழப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.
கடும் சர்ச்சை
இதனால் சர்வதேச அளவில் கடும் சர்ச்சை எழுந்ததையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் இம்ரான் கானுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இம்ரான் கானின் பார்வை மோசமடைந்து வருவதால், அவரை ராவல்பிண்டியின் அடியாலா சிறையிலிருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்கு (PIMS) பலத்த பாதுகாப்புடன் மாற்றியதாகப் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், அவர் 15 வாகனங்கள் கொண்ட கான்வாய் மூலம் சிக்னல் ஜாமர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருடன் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவச் செயல்முறை
மருத்துவமனையில், மருத்துவர்கள் இம்ரான் கானின் விழித்திரை நோய்க்கும் பார்வையைப் பாதுகாப்பதற்கும் சிறப்புச் சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில், சாதாரண இருதயப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் அல்-ஷிபா கண் மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர்களால் இம்ரான் கானுக்கு அறுவை சிகிச்சை மற்றும் கண் மருத்துவச் செயல்முறை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |