யாழில் உதவியளிக்க முற்பட்டவருக்கு நேர்ந்த சம்பவம்
மோட்டார் சைக்கிளை மறித்து ஏற்றிச் செல்லுமாறு கோரியவருக்கு உதவியளிக்க முற்பட்டவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் இன்றிரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் சிவலிங்கப்புளியடியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தையடுத்து சங்கிலியை அபகரித்துச் சென்றவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் சிக்கிக்கொண்டார். சந்தேக நபரிடமிருந்து சங்கிலியும் கைப்பற்றப்பட்டது.
வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்த ஒருவர் தன்னை ஏற்றிச் செல்லுமாறு கேட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றவர் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அவர் அணிந்த 6 தங்கப்பவுண் தங்கச் சங்கிலியை அறுத்து தப்பித்து ஓடியுள்ளார்.
சங்கிலியைப் பறிகொடுத்தவர் துரத்திச் சென்ற போதும் பிடிக்க முடியவில்லை. சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்தனர். சந்தேக நபரிடமிருந்து தங்கச் சங்கிலி கைப்பற்றப்பட்டது.
வண்ணார்பண்ணை ஓடை வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டார். அவர் சிறையிலிருந்து அண்மையில்தான் விடுவிக்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.