தோட்டத் தொழிலாளர் சம்பளம் குறித்த இறுதி முடிவு: ஒன்று கூடவுள்ள வேதன நிர்ணய சபை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக மீண்டும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வேதன நிர்ணய சபை ஒன்று கூடவுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து அண்மையில் வெளியிடப்பட்ட இரண்டு வர்த்தமானிகளும் கடந்த (24) ஆம் திகதி இரத்து செய்யப்பட்டன.
பெருந்தோட்ட நிறுவனங்கள்
பெருந்தோட்ட நிறுவனங்கள் வேதன அதிகரிப்புக்கான வர்த்தமானிகளுக்கு எதிராகப் பெருந்தோட்ட நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், குறித்த வர்த்தமானிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, அடுத்த மாதத்துக்குள் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளவும் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாகக் குறித்த வேதன அதிகரிப்பு வர்த்தமானி இரத்து செய்யப்பட்டமை தொடர்பாக பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக 1,700 ரூபாய் வேதனத்துக்குப் பதிலாக அதனிலும் குறைந்த தொகை ஒன்றுக்கு இணக்கம் எட்டப்படலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், வேதனத்தொகை தொடர்பாக புதிய இணக்கப்பாட்டை எட்டுவதற்காக வேதன நிர்ணய சபையை ஒகஸ்ட் மாதம் கூட்ட அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |