மோடி அடுத்தாண்டு வீட்டில் தான் தேசியக்கொடியேற்றுவார் - சுதந்திர தினத்தில் எதிர்வுகூறல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த ஆண்டு அவரது வீட்டிலேயே தேசிய கொடியை ஏற்றுவார் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டும் சுதந்திர தினத்தில் நான் பிரதமராக கொடியேற்றுவேன் என இன்று காலை ஆற்றிய சுதந்திர தின உரையில் நரேந்திர மோடி கூறியிருந்த நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
புதிய சர்ச்சை

இந்தியாவின் புதுடில்லியின் செங்கோட்டையில் இன்று இடம்பெற்ற 77 ஆவது சுதந்திர தின நிகழ்வை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புறக்கணித்துள்ளார்.
பிரதமரின் சுதந்திர தின உரை நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொள்ளாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சுக்லா, “காங்கிரஸ் கட்சித் தலைவர், ஏனைய சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டியது இருந்தது என கூறியுள்ளார்.
அமைச்சர்கள் உள்ளிட்ட பலரால் செங்கோட்டையை எளிதாகச் சென்றுசேர முடியவில்லை எனவும் ராஜீவ் சுக்லா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை மல்லிகார்ஜுன கார்கே காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நரேந்திர மோடியின் உரை

பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவதற்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில் காணொளிச் செய்தியை பதிவிட்டிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளில் தான் நாடு முன்னேற்றம் அடைந்ததாக சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எனினும் அதில் துளிகூட உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“வெள்ளைக்காரர்கள் இந்தியாவை விட்டுச் செல்லும்போது ஒரு துரும்புகூட இங்கு இல்லை எனவும் அதற்குப் பின்னர் ஜவகர்லால் நேருவின் முன்னெடுப்பால் இரும்பு ஆலைகளும் அணைகளும் உருவாக்கப்பட்டன எனவும் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இன்று ஜனநாயகம், அரசியலமைப்பு, தன்னாட்சி அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன எனவும் அதனை தாம் வேதனையுடன் பதிவு செய்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொருளாதார சட்ட செயலாக்கத்துறை, வருமானவரித் துறைகள், மத்திய புலனாய்வு துறை ஆகிய அரசு முகமைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்கள் முடக்கப்படுகின்றன எனவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தேர்தல் ஆணைக்குழுவை பலவீனப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல்கள் முடக்கப்படுகின்றன எனவும் விமர்சித்துள்ளார்.
சிறந்த மனிதர்கள் கடந்தகால வரலாறுகளை அழிப்பதில்லை, மாறாக தனக்கென புதிய வரலாறுகளை உருவாக்குகிறார்கள்,” எனவும் மல்லிகார்ஜுன கார்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர், தனது காணொளி பதிவில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடைசி சுதந்திர தின உரை

இதேவேளை, டெல்லி செங்கோட்டையில் இந்த ஆண்டு நரேந்திர மோடி ஆற்றும் சுதந்திர தின உரைதான், பிரதமராக அவர் ஆற்றும் கடைசி சுதந்திர தின உரை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடிக்கு சவாலாக உருவெடுத்திருக்கும் நிலையில், மம்தாவின் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் எனவும் நாடு முழுவதும் பாஜக வீழ்த்தப்படுவதை போன்று மேற்கு வங்கத்திலும் பாஜக வீழ்த்தப்படும் எனவும் மம்தா பானர்ஜி மேலும் கூறியுள்ளார்.