டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா!
இலங்கையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நாட்டின் தொடர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்தியா உதவிக்கரம் நீட்டி உள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா, இன்று 500 லிட்டர் டெக்னிக்கல் மலாத்தியானை இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸாவிடம் வழங்கினார்.
இலங்கை அரசாங்கத்தின் அவசர கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மக்களின் சார்பில் இந்த உதவி வழங்கப்பட்டதாக இந்திய உயர் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 லிட்டர் தொழில்நுட்ப மாலத்தியான்
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யுபிஎல் லிமிடெட் (UPL Limited) வழங்கிய இந்த மருந்துத் தொகை, கோரிக்கை விடுக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் கொழும்பை வந்தடைந்துள்ளதாகவும், நெருக்கடி நிலைகளில் இலங்கைக்கு உடனடி உதவியை வழங்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை இது மீண்டும் வெளிப்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் 86 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் மேற்கு மாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு கொசுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் புகைத் தெளித்தல் மற்றும் மருந்து தெளித்தல் நடவடிக்கைகளில் இந்த தொழில்நுட்ப மலாத்தியோன் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |