படகில் செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டவர் கைது
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டைச் சேர்ந்தவர் என சந்தேகப்படும் நபர் ஒருவர் சுற்றி வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து கியூ பிரிவு பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சுற்றிக் கொண்டு இருந்த வரை மடக்கிப் பிடித்த கியூ பிரிவு பொலிஸார் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அவர் இங்கிலாந்து பாஸ்போர்ட் மற்றும் இந்திய, இலங்கை பணமும் வைத்திருந்தமை தெரிய வந்தது. விசாரணையில், பிடிபட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன்(வயது- 47) என்பது தெரியவந்தது.
இவர் இந்தியா வாழ் வெளிநாட்டினருக்கான, ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்து இருந்தார். இவர் கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களுருக்கு வந்துள்ளார். அங்கு இருந்து வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு கடந்த 9 ஆம் திகதி தூத்துக்குடிக்கு வந்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும், பின்னர் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் உரிய அனுமதியின்றி இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாகவும், இதற்காக கடற்கரையில் நின்ற போது பிடிபட்டுள்ளதாகவும் விசாரனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ 'கேட்டமைன்' போதை பொருளை பறிமுதல் செய்து உள்ளனர். இந்த வழக்கில் ஜோனாதன் தோர்ன் கைது செய்யப்பட்டு 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஜெயிலில் இருந்து உள்ளார்.
பின்னர் பரோலில் வெளியில் வந்துள்ளார். இவர் இதுவரை 60 நாடுகளுக்கு சென்று இருப்பது தெரியவந்து உள்ளது.
இதைத் தொடர்ந்து கியூபிரிவு பொலிஸார் ஜோனாதன் தோர்ன் மீது பாஸ்போர்ட் முறைகேடு வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
